ட்ரம்பிற்கு கிடைத்த ஏமாற்றம்: நோபல் பரிசுக்கு வாய்ப்பே இல்லை
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் அமைதிக்கான நோபல் பரிசு ஒக்டோபர் 10ஆம் திகதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துவரும் நிலையில் அதற்கான வாய்ப்பு அறவே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாய்ப்புகள் குறைவே உள்ளன
ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என இவ்விருதுகள் குறித்து கூர்ந்து கவனித்துவரும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நினா கிரேகர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களுக்கான சுதந்திரங்களை ட்ரம்ப் மறுப்பதாக அமைதிக்கான நோபல் பரிசு குழு உறுப்பினர் ஒருவரே கூறியுள்ளதும் கவனம் பெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும் நோபல் பரிசுக்காக ஆயிரக்கணக்கான பெயர்கள் முன்மொழியப்படுகின்றன.
காலம் பிந்திய பெயர் பரிந்துரை
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான பட்டியலில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேட்டோ, கொங்கொங் ஆர்வலர் சௌ ஹாங்-டங் மற்றும் கனேடிய மனித உரிமை சட்டத்தரணி இர்வின் கோட்லர் உட்பட 338 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் போன்ற சில தலைவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவருடைய பெயர், ஜனவரி 31 இற்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனவே, நோபல் விதிகள்படி அவை செல்லாது எனக் கூறப்படுகிறது. அதாவது, 2025 பரிசுக்கான பரிந்துரை காலக்கெடு ஜனவரி 31 ஆகும். மேலும் அவை 2026ஆம் ஆண்டுக்கு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆகையால், ட்ரம்ப்க்கான நோபல் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்காததுடன், ஐந்து பேர் கொண்ட நோபல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரது பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்
ஒருவேளை, ட்ரம்ப்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாவிட்டால், அது நோர்வேக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் 15 வீத வரியை அனுபவித்து வரும் நோர்வேக்கு இது மேலும் அதிகரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. உறவுகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் சிக்கலை உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
