ஹோர்முஸ் நீரிணையை சம்பந்தப்பட்ட நாடுகளே திறந்து கொள்ளட்டும்: ட்ரம்ப் அதிரடி
ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க அந்தப் பாதையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகளே நடவடிக்கை எடுக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் போஸ்ட் (New York Post) இதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்கப் படைகள் ஈரானின் இராணுவத் திறன்களை ஏற்கனவே நிர்மூலமாக்கி வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இனி அமெரிக்கப் படைகள் இந்தப் பிராந்தியத்தில் நீண்ட காலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் திறன்
மேலும் தெரிவித்த அவர், நாங்கள் அங்கு இன்னும் நீண்ட காலம் இருக்கப் போவதில்லை எனவும் ஈரானின் எஞ்சியிருக்கும் தாக்குதல் திறன்களை அழிப்பதற்கு இன்னும் சிறிது வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளன எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச எரிசக்திப் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கிய ட்ரம்ப், நான் அந்த நாட்டை (ஈரான்) அழித்துவிட்டேன் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவ வலிமை
அத்தோடு, அவர்களுக்கு இனி எந்தப் பலமும் இல்லை எனவும் அந்த நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகள் அங்கே சென்று அதைத் தாங்களாகவே திறந்து கொள்ளட்டும் எனவும் பரிந்துரைத்துள்ளார்.

மேலும், அந்த எண்ணெயைக் கட்டுப்படுத்துபவர்கள் யாரோ அவர்கள் அந்த நீரிணையைத் திறப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று தான் கருதுவதாகவும் எனவே சம்பந்தப்பட்ட நாடுகளே இதில் நேரடியாக இறங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் இராணுவ வலிமை முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளமை இப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்