மன்னிப்பு கேட்ட ஈரான் ஜனாதிபதி! மகிழ்ச்சியில் மார்தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஏற்பட்ட மோதலின் பின்னணியில், ஈரான் வளைகுடா நாடுகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் கடுமையான தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக துபாய் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
ஈரான் ஜனாதிபதி
இந்த சூழ்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும், அந்த நாடுகளிலிருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாதவரை, அவர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளிடம் தோல்வி
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், கடுமையான தாக்குதல்களை சந்தித்து பலவீனமடைந்ததால் ஈரான் தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டு பின்னடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இனி தாக்குதல் நடத்தமாட்டோம் என்ற உறுதியும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தொடர்ச்சியான தாக்குதல்களால் தான் ஈரான் வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, ஈரான் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது என்றும், பல ஆயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக அண்டை மத்திய கிழக்கு நாடுகளிடம் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மன்னிப்புக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகள் தமக்கு நன்றி தெரிவித்ததாகவும், அதற்கு “உங்களை வரவேற்கிறோம்” என்று பதிலளித்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை ஈரானுக்கு மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும், இதுவரை இலக்காக வைக்கப்படாத பகுதிகளும் ஈரானின் நடவடிக்கைகள் காரணமாக தாக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, எந்த நிபந்தனையும் இன்றி சரணடைய வேண்டும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்த நிலையில், “ஒருபோதும் சரணடைய மாட்டோம்” என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |