ஈரான் போர் குறித்த சர்ச்சை : போப் லியோவிடம் மன்னிப்பு கேட்க ட்ரம்ப் மறுப்பு : முற்றுகிறது முறுகல்
ஈரான் மீதான தனது போர் குறித்து வளர்ந்து வரும் பிளவுகளுக்கு மத்தியில், உலகின் 130 கோடி கத்தோலிக்கர்களின் தலைவரான போப் லியோவை பகிரங்கமாகக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று(13) அவரிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் போப்பின் செயல்பாடு "பலவீனமானது" என்றும், வெளியுறவுக் கொள்கையில் அவர் "மோசமாக" இருப்பதாகவும் கூறி அவரைக் கண்டித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியை திருப்திப்படுத்த தேர்வு
மேலும், முதல் அமெரிக்க போப்பான லியோ, அமெரிக்க ஜனாதிபதியைத் திருப்திப்படுத்துவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லியோவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று கேட்டதற்கு, ட்ரம்ப், "இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், போப் லியோ தவறான விஷயங்களைக் கூறினார்," என்றார்.
மன்னிப்பு கேட்கமாட்டேன்
"ஈரான் விஷயத்தில் நான் செய்வதை அவர் கடுமையாக எதிர்த்தார். அணு ஆயுத ஈரான் இருக்கக்கூடாது. இதன் இறுதி முடிவில் போப் லியோ மகிழ்ச்சியடைய மாட்டார்," என்று ஓவல் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

"குற்றம் மற்றும் பிற விஷயங்களில் அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார். நான் போப் லியோவின் கருத்துக்கு பதிலளிக்கிறேன், அவ்வளவுதான்." என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |