இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி இரத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதித்திருந்த பாரிய வரிகளை அந்நாட்டு உயர்நீதிமன்றம் இன்று (20) இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
வரிகளை விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது என்றும், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயற்பட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னதாக 2025 ஆகஸ்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று கூறியிருந்த போதிலும், அவற்றை நடைமுறையில் இருக்க அனுமதித்திருந்தது.
புதிய நிச்சயமற்ற தன்மை
ஆனால், தற்போது உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தி வரிகளை முற்றாக நீக்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இது பில்லியன் கணக்கான டொலர் வரித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பைத் திறந்துள்ளதுடன், உலகளாவிய வர்த்தகச் சூழலில் புதிய நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டப் போராட்டமின்றி நடக்காது
இது குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து உரையாற்றிய டிரம்ப், நீதிமன்றத் தீர்ப்பை "பயங்கரமானது" என்று குறிப்பிட்ட அவர், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்தவர்களை "முட்டாள்கள்" என்று கடுமையாகச் சாடினார்.

வரித் தொகையைத் திரும்பப் பெறுவது சட்டப் போராட்டமின்றி நடக்காது என்று சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பான விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இழுபறியாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவில் முதலீடு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதாக அவர் வாதிடும் இந்த இறக்குமதி வரிகளைத் தொடர, பிற சட்டங்களை நாடுவேன் என்றும் அவர் கூறினார். "எங்களிடம் மாற்று வழிகள் உள்ளன - சிறந்த மாற்று வழிகள், இதன் மூலம் நாங்கள் இன்னும் வலிமையடைவோம்," என்று அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |