ஈரானுக்கான கடைசி வாய்ப்பு...! டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடக் கோரி வாஷிங்டன் - தெஹ்ரான் இடையேயான பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது.
அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சில முன்னேற்றங்கள்
இந்தநிலையில், ஜெனீவா பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் பல முக்கிய விடயங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், ஹார்மோஸ் நீரிணையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி ஈரான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஓமன் வளைகுடாவில் ரஷ்யாவுடன் இணைந்து கடற்படைப் பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றது.

இதற்குப் பதிலடியாக, எஃப்-35 உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளிட்ட 13 கப்பல்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா அதிரடியாக நிலைநிறுத்தியுள்ளது.
வாஷிங்டனில் தனது அமைதி வாரியத்தின் தொடக்கக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும் மற்றும் தவறினால் மோசமான விளைவுகள் நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இரு தரப்பும் படைகளைக் குவித்து வருவதால் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளமை உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |