அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்..! முடக்கப்பட்ட தவெக - தலைமறைவான தலைமைகள்
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் அடுத்த வாரம் கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக விஜயை கைது செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு
சென்னை உயர் நீதிமன்றம் இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தொடர்பாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பாய்ந்தது.
தலைவர் விஜய் கைது
கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை கைது செய்ய நேரிட்டால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வதே முக்கியமானது. கரூரில் 41 பேர் பலியானது சாதாரண விடயமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த சம்பவத்திற்கு தமிழக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்? நாங்கள் காவல்தறை பாதுகாப்பு காவல்துறை பாதுகாப்பு அளித்தோம். அத்துடன் நிபந்தனைகளை விதித்து ஆலோசனை வழங்கினோம்.
எங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே என அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
விஜய் அடுத்த வாரத்தில் கரூர்
இவ்வாறான பின்னணியில், த.வெ.க. தலைவர் விஜய் சமூக வலைத்தளத்தில் காணொளியில் கரூர் மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்ததது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்ல இருக்கிறார். இதற்காக முறையாக நீதிமன்றத்தில் மனு செய்து, அனுமதி கேட்கப்பட உள்ளது.
நீதிமன்றம் அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
