கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் கோர விபத்து இருவர் பலி நால்வர் படுகாயம்
கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் புனாணையில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மகப்பேற்று விடுமுறை முடித்து கடமைக்கு வந்த பெண் வைத்தியர்
மகப்பேற்று விடுமுறையில் நின்ற பெண் வைத்தியர் தனது குடும்பத்துடன் சிலாபத்தில் இருந்து காத்தான்குடி வைத்தியசாலைக்கு தனது கடமையினை பொறுப்பெடுப்பதற்காக பயணித்த வேளையே இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் சாரதியாக வந்த புத்தளம் வீதி சிலாபத்தை சேர்ந்த எம்.எச்.மர்சூக் (வயது – 80) என்பவரும் வைத்தியரின் ஐந்து மாதம் மதிக்கத்தக்க ஆண் குழந்தையும் மரணமடைந்தனர்.
வைத்தியர் உட்பட நால்வர் படுகாயம்
விபத்தில் ஐவர் காயமடைந்ததுடன் இவர்களில் 18 மாதங்கள் நிரம்பிய குழந்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் வைத்தியர் முப்லிஹா (வயது 30) அவருடன் சேர்த்து நான்கு பேர் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் பேருந்தி்ன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.