முதியவர்களை படுகொலை செய்துவிட்டு தங்க நகைகள் திருட்டு! கொழும்பில் நடந்த பயங்கரம்
சீதுவ மற்றும் தலஹேன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு திருட்டு சம்பவங்களில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீதுவ, முகலங்காமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயதுடைய பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வீட்டில் கொள்ளையிட வந்த திருடரே கொலையை செய்ததாக காவல்துறையினர் அவர்களது முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை மாலபே, தலஹேன பகுதியில் நேற்று புதன்கிழமை இருவர் வீடொன்றிற்குள் புகுந்து மனைவியை கட்டிபோட்டு 80 வயதுடைய அவரது கணவரை கொன்றுள்ளனர்.
இரு சம்பவ இடங்களிலும் வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடிவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.