அதிகரிக்கும் மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மின்னல் தாக்கம் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தாக்கம்
இந்த எச்சரிக்கை இன்று (08) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த மின்னல் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறும் தேவையற்ற உயிரிழப்புகளை தவிரத்து கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்னல் தாக்கியதில் நேற்றும் (07)இன்றும் இரண்டு இளம் விவசாயிகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று முல்லைத்தீவிலும்(mullaitivu) இன்று யாழ்ப்பாணத்திலும்(jaffna) இடம்பெற்றுள்ளன
.இரண்டு சம்பவங்களும் வயல் மற்றும் தோட்டவெளி பகுதியிலேயே நடந்துள்ளன.
முல்லைத்தீவில் துயரம்
இதன்படி நேற்றையதினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல் வெளிபகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.
எட்டாம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 43 வயதுடைய அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழில் மிளகாய் ஆய்ந்து கொண்டிருந்தபோது சம்பவம்
அதேபோன்று இன்றையதினம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார். இதன்போது ஏழாலை கிழக்கு, ஏழாலை என்ற முகவரியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம் தனது தோட்டத்தில் மிளகாய் ஆய்ந்துகொண்டிருந்தார். இதன்போது மின்னல் அவர் மீது தாக்கியது. இந்நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
