படகு கவிழ்ந்ததால் தமிழகம் சென்ற யாழ் மீனவர் இருவர் கைது!
சீரற்ற காலநிலை காரணமாக படகு கவிழ்ந்ததால் தமிழகம் சென்ற யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தின் பலாலியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மாலை சர்வதேச எல்லையை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற வேளை அதிகாலை 3 மணியளவில் குறித்த படகு கவிழ்ந்துள்ளதாகவும் இதனையடுத்து சுமார் 30 மணிநேரம் நீந்தி இந்தியக் கடற்கரைக்கு அருகில் சென்றதாக அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழக கடற்றொழிலாளர்கள் உதவி
மேலும், இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளில் வந்த தமிழக கடற்றொழிலாளர்கள் சிலரிடம் தங்களை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில், நாகப்பட்டினம் சிறுதலைக்காடு பகுதியை சேர்ந்த உள்ளூர் கடற்றொழிலாளர்கள், இந்திய கடற்கரைக்கு அருகில் உள்ள கடலில் இவர்களை கண்டு, தமது கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் கடற்றொழிலாளர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர்.
