பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு - இந்தியாவில் சிக்கிய இருவர்
வத்தளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த இலங்கையர்கள் இருவரை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் வத்தளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்
கடந்த வியாழக்கிழமை வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக ‘தி ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இவர்கள் இருவருக்கும் எதிராக இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அதிகாரிகள் அவர்களை ஒப்படைக்குமாறு கோரியுள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் உள்ள விசேட முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு வாரத்திற்குள் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |