கொலை வெறிச்செயலை ஒருபோதும் ஏற்கமுடியாது - சீமான் கண்டனம்
இந்தியாவின் ராஜஸ்தானில் கன்ஹையா லால் தேலி என்பவரை படுகொலை செய்த கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்ச பட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் தையல்கடை நடத்தி வந்த கன்ஹையா லால் தேலி என்பவரின் தலைதுண்டிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கோரநிகழ்வு நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என சீமான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்டனம்
உதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்!https://t.co/uZsSvce5O0 pic.twitter.com/q9ikFDFa5d
— சீமான் (@SeemanOfficial) June 30, 2022
கருத்தை மாற்றுக் கருத்தாலும், அவதூறுகளை சட்ட வழிமுறைகளாலுமே எதிர்கொள்ள வேண்டுமே ஒழிய, வன்முறைத் தாக்குதல்களும், மனிதப் படுகொலைகளும் ஒருபோதும் அதற்குத் தீர்வாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு உயிரைப் பறித்திடும் கொலைவெறிச்செயலை எதன்பொருட்டும் நியாயப்படுத்த முடியாது எனவும் சாதியின் பெயரால் நடக்கும் ஆணவக்கொலைகளையும், மதத்தின் பெயரால் நடக்கும் அடிப்படைவாதக் கொலைகளையும் ஒருநாளும் ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கன்ஹையா லால் தேலியின் உயிரைப் பறித்திட்ட இக்கொடுஞ்செயலுக்கு தமது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அரசியல் இலாபக்கணக்கீடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது
அன்பையும், சமத்துவத்தையும், பரிவையும், கருணையையும் போதிக்கும் மார்க்கத்தைத் தழுவிக்கொண்டு, அந்த மார்க்கத்தின் பெயரைச் கூறி நடத்துகிற இத்தகையக் கீழான வன்முறைச்செயற்பாடுகளுக்கு அம்மார்க்கமும், அம்மார்க்கத்தைத் தழுவி நிற்கும் பல கோடிக்கணக்கான மக்களும் பொறுப்பேற்க முடியாது எனவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவோரை வன்முறையாளர்களாகச் சித்தரித்து, குற்றப்படுத்தி, மதஒதுக்கல் செய்ய முனைகிற இந்து தத்துவ வெறியர்களின் தவறான முயற்சிக்கு இந்த படுபாதகச்செயல் வலுச்சேர்க்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படைவாதச் சிந்தனையாலும், வன்முறைப்பாதையாலும் தனிப்பட்ட இருவர் செய்த இந்தக் கோரக்கொலையைக் கொண்டு, ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முனையும் அரசியல் இலாபக்கணக்கீடுகளை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாதெனவும் சீமான் மேலும் வலியுறுத்தியுள்ளார்.