இந்தியாவை அதிர வைத்த தலைதுண்டிப்பு - ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு
முஸ்லிம்களின் இறைதூதரான நபிகள் நாயகத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டார் என தெரிவித்து ராஜஸ்தானில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்தி பரவியதால் ராஜஸ்தானின் உதய்பூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையத்தள சேவையும் முடக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்ள்ளது.
தலை தூண்டித்து படுகொலை
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்தி வந்த கன்னையா லால் என்ற நபர், நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் எனத் தெரிவித்து தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது கடைக்குள் அத்துமீறி பிரவேசித்த இருவர் கன்னையா லாலை வலுக்கட்டமாய இழுத்துசென்று, பொது இடத்தில் வைத்து அவரின் தலையை துண்டித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் ராஜஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமை
இந்தக் கொலையில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறையினர் விரைந்து கைதுசெய்துள்ள நிலையில், குறித்த பகுதியில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பாரிய அளவில் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதய்பூர் கொலைச் சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அதுவரை மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யுமாறு இந்தியாவின் தலைசிறந்த பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு பிரிவிடம் மத்திய அரசு கோரியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னால் உள்ள அமைப்புகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.