கைது அச்சத்தில் அலறும் கம்மன்பில: விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியின் சாட்சியம்
அரசியல் பழிவாங்கலுக்காகவே அரசு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை (Udaya Gammanpila) ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய முயற்சிக்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிடம் (SLPP) வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோரை சந்தித்து மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.
சோடிக்கப்பட்ட சாட்சி
இதன்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசாங்கத்தின் குறைப்பாடுகள் மற்றும் ஊழல் மோசடிகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மக்களுக்காக செயற்பட்டார்.
உதய கம்மன்பிலவை கைது செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.
2025.08.05 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பை நடத்தி விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோடிக்கப்பட்ட சாட்சியை அடிப்படையாகக் கொண்டு கடற்படையின் முன்னாள் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.
இந்த கூற்றில் எந்தவொரு இனத்தையும் அவர் குறிப்பிடவில்லை. அரசியலமைப்பின் 14(1) அளிக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்துக்கு அமைவாகவே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இனங்களுக்கிடையில் முரண்பாடு
ஊடக சந்திப்பை நடத்தி உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்தினால் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படும் என்று குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கம் கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு பி அறிக்கை சமப்பித்துள்ளது.
உரிய காரணிகள் ஏதுமின்றி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயம் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டால் பிணை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமையும்.
ஆகவே அரசாங்கத்தின் அடக்குறைகளுக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என பிவிதுறு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
