பிரித்தானியாவில் இருந்து தப்பியோடிய தமிழ் தொழிலதிபர்! வெளியாகும் அதிர்ச்சிகர பின்னணி
பிரித்தானியாவில் பெரும் தமிழ் தொழிலதிபராக இருந்த வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளையின் £150 மில்லியன் (சுமார் ₹1,400 கோடி) மதிப்புள்ள சொத்துகளை பிரிட்டன் உயர் நீதிமன்றம் முடக்கியுள்ளது.
அவருக்கு சொந்தமான பிரிட்டனில் உள்ள முக்கியமான Prax Lindsey எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திடீரென மூடப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Prax குழுமத்தின் ஐந்து நிறுவனங்களின் நிர்வாகிகள், சூசைப்பிள்ளை மீது பொறுப்புகளை மீறல், மோசடி, பொய்யான அறிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
freezing injunction
இது ஒரு சாதாரண முதலீட்டு தோல்வி அல்ல எனவும் பெரிய அளவிலான நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என்பதற்கான பல ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்போது, ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளத்தை நிலுவையில் வைத்து விட்டு, இவர் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை நிறுவனத்தில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கில் நீதிமன்றம் “freezing injunction” எனப்படும் சொத்துகள் முடக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் மூலம், சூசைப்பிள்ளை பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள தனது சொத்துகளை விற்பனை செய்யவோ, வேறு பெயரில் மாற்றவோ முடியாது.
அத்தோடு, சந்தேகநபரான சூசைப்பிள்ளை வாரத்திற்கு £2,500 வரை மட்டுமே செலவழிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை அழிவு
இதேவேளை, அவரிடம் £50,000க்கும் மேல் சொத்துகள் இருந்தால், அவற்றைப் பற்றி முழு விவரம் தர வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை மற்றும் அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை பிரித்தானியாவில் இருந்து தப்பி சென்றுள்ள நிலையில், அவர்கள் மத்தியக்கிழக்கு அல்லது, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடொன்றில் தலைமறைவாகியிருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், Prax Lindsey எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என்பது, பிரித்தானியாவில் மொத்தமாக உள்ள ஐந்து சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று எனவும் இது நாட்டின் எரிபொருள் உற்பத்தியில் 10 சதவீத பங்கை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த நிறுவனத்தின் திடீர் முடக்கம், பிரித்தானியாவின் எரிபொருள் உற்பத்தி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பெருமளவிலான தொழிலாளர்களும் வேலைகளை இழந்துள்ள நிலையில், அந்நாட்டின் தொழிற்சங்கம் இதனை தொழில்துறை அழிவு எனக் கண்டித்து அரசை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
