உக்ரைனின் அதிரடி ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவின் பிரதான தானிய ஏற்றுமதி முனையங்கள் முடக்கம்
ரஷ்யாவின் பிரதான கருங்கடல் துறைமுக நகரமான நோவோரோசிஸ்க் (Novorossiysk) மீது உக்ரைன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
குறித்த இரவுநேர ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் இரண்டு முக்கிய தானிய ஏற்றுமதி முனையங்கள் பலத்த சேதமடைந்து தங்களின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியுள்ளன.
உலகின் மிகப்பெரிய கோதுமை ஏற்றுமதியாளரான ரஷ்யாவின் முக்கிய துறைமுகம் மீது நடத்தப்பட்ட இந்த நேரடித் தாக்குதல், உலகச் சந்தையில் உணவு தானிய விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும் விலையேற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவசரநிலை பிரகடனம்
- ஆண்டுக்கு 8.5 மில்லியன் மெட்ரிக் டன் ஏற்றுமதித் திறன் கொண்ட டெமெட்ரா ஹோல்டிங் (Demetra Holding) நிறுவனத்திற்குச் சொந்தமான முனையம்.
- ஆண்டுக்கு 7.1 மில்லியன் மெட்ரிக் டன் திறன் கொண்ட என்.கே.எச்.பி (NKHP) தானிய முனையம்.
இந்த இரண்டு பிரதான முனையங்களும் சேதமடைந்துள்ளதால் அங்கிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா கடல்வழிப் படகுகள் (Unmanned surface vessels) மூலம் இந்த ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிராஸ்னோடார் (Krasnodar) பிராந்திய ஆளுநர் வெளியிட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதலில் 8 வயது சிறுமி உட்பட குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் துறைமுகப் பகுதியில் நீர் விநியோகம் தடைபட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக நிபுணர்கள்
இத்தாக்குதல் செய்தி வெளியான உடனேயே, சிகாகோ வர்த்தகச் சந்தையில் (Chicago Wheat Futures) கோதுமையின் சர்வதேச விலை உடனடியாக 3% வரை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதியில் பெரும்பகுதி நோவோரோசிஸ்க் துறைமுகம் வழியாகவே ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்த வழித்தடம் முடங்கினால் ஏழை நாடுகளில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்படும் என சர்வதேச உணவு வர்த்தக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கிரிமியா பகுதியில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தளங்கள் மீது உக்ரைன் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தியதால், ரஷ்யா தனது பெரும்பாலான போர்க்கப்பல்களை நோவோரோசிஸ்க் துறைமுகத்திற்கு மாற்றியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது அத்துறைமுகத்தையே இலக்கு வைத்து உக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |