ரஷ்யா வெளியிட்டுள்ள அறிவிப்பு! முற்றாக மறுத்துள்ள உக்ரைன் ஜனாதிபதி
கிழக்கு உக்ரைனின் கோஸ்டியாண்டினிவ்கா நகரைக் ரஷ்யப் படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் அந்நாட்டு ராணுவப் பொதுப் பணியாளர் குழுவும் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இந்த நகரம் இன்னும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் நீடிப்பதாகவும், கிழக்குக் குழுமத்தின் 19-வது ராணுவப் படைப்பிரிவினர் நகருக்குள்ளும் அதன் அணுகுசாலைகளிலும் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புடினுக்கு ஜெலென்ஸ்கி சவால்
இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Image Credit: The Boston Globe
அதில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெறும் பொய் என்றும், செய்தி உருவாக்குவதற்கான முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோஸ்டியாண்டினிவ்கா நகரம் உண்மையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தால், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர வழியைக் கண்டறிய ஜனாதிபதி புடின் தன்னை அங்கு வந்து சந்திக்குமாறு சவால் விடுத்துள்ளார்.
ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு
எனினும், கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஜெலன்ஸ்கியின் இந்தச் சந்திப்பு ஆலோசனையைக் கேலி செய்துள்ளார்.

Image Credit: NBC News
கோஸ்டியாண்டினிவ்கா ஏற்கனவே ரஷ்யாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாகவும், மொஸ்கோவில் புடினைச் சந்திக்குமாறு ஜெலென்ஸ்கிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |