வெளிநாடுகளில் சொத்து மோசடி செய்தவர்களின் பணத்தை மீட்பதற்கு ஐ.நா சபை இணக்கம்
வெளிநாடுகளில் சொத்துக்களை மோசடி செய்து பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் தெற்காசிய பிராந்திய பிரதிநிதி மார்கோ டீக்சீராவுக்கும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்ற போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புதிய ஊழல் ஒழிப்புச்சட்டம்
அவ்வாறு ஈட்டப்பட்ட பணத்தை வெளிநாடுகளில் வைப்பு செய்தவர்களிடம் இருந்து பணத்தை மீட்பது தொடர்பில் உலக வங்கியின் சார்பில் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி புதிய ஊழல் ஒழிப்புச்சட்டம் அமுலுக்கு வரவுள்ள நிலையில் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் இவ்வாறானவர்கள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.