கஜேந்திரகுமாருக்கு எதிரான புத்த பிக்குகளின் அச்சுறுத்தல் - ஐ.நா. ஆணையாளருக்கு கடிதம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்மபலத்திற்கு எதிரான புத்த பிக்குகளின் அச்சுறுத்தல்களை ஐ.நா. ஆணையாளர் கவனஞ் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வொல்கர் துர்க்குக்கான கடிதமொன்றில், சிறிலங்காவிலுள்ள நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அவரது அரசியல் செயற்பாடுகள் காரணமான கடும் அச்சுறுத்தலொன்று தொடர்பாக விசுவநாதன் உருத்திரகுமாரன் உயர்ஸ்தானிகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அண்மைய அச்சுறுத்தல்

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சிறிலங்காவிலுள்ள நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரொருவருக்கெதிரான அண்மைய அச்சுறுத்தலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் நான் இதை எழுதுகிறேன்.
வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
தமிழர்களுக்கெதிரான மனித உரிமைகள் மீறல்களை எடுத்துக் காட்டுவதில் அவர் செயற்படுநிலையில் உள்ளதோடு, சிறிலங்கா அரசால் தமிழ் மக்களுக்கெதிராக புரியப்பட்ட இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை கோருகிறார்.
தவிர, எந்தவொரு புத்தர்களும் வசிக்காத தமிழ்ப் பகுதிகளில் அரசாங்க ஆதரவுடனான புத்த விகாரைகள் கட்டுமானங்கள் தொடர்பிலும் அவர் கரிசனை காட்டுகிறார்.
இது தமிழர்களின் பாரம்பரிய தாய்நிலத்தில் சிறுபான்மையொன்றாக தமிழர்களை குறைக்கும் சிறிலங்கா அரசின் நகர்வொன்று ஆகும்” என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வுகளில் தொடர்ச்சியாக மிகவும் செயற்படுநிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் இருந்துள்ளதுடன், தமிழ் மக்களுக்கெதிராக புரியப்பட்ட பாரிய அட்டூழியங்களுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமெனவும் குரல் கொடுக்கிறார்”
தலைநகர் கொழும்பிலுள்ள நாடாளுமன்றத்தின் தமிழ் உறுப்பினரான கஜேந்திரகுமாரின் வசிப்பிடத்தை நாடாளுமன்றத்தின் சிங்கள உறுப்பினரொருவர், பல சிங்கள புத்த பிக்குகள் தலைமையிலான பாரிய சிங்களக் கூட்டமொன்று இம்மாதம் 26ஆம் திகதி சூழ்ந்துள்ளது.
அந்நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், அவரது குடும்பத்துடனும், வயதான தாயாருடனும் அவரது வசிப்பிடத்தினுள்ளே இருந்ததாக கடிதம் தொடருகிறது.
“நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கெதிராக கூக்குரல் எழுப்பிய சனக்கூட்டமானது கோஷங்களை எழுப்பியதுடன், அவரது அரசியல் செயற்பாடுகளையும், தமிழ்ப் பகுதிகளில் புத்த விகாரைகளின் கட்டுமானத்துக்கெதிரான அவரது எதிர்ப்பையும் அவர் கைவிடாமல் விட்டால் பாரிய பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அச்சுறுத்தியது”
சிங்கள இனவாத ஆதிக்கம்

இச்சம்பவமானது சிங்கள இனவாதம், ஆதிக்கத்தின் இன்னொரு வெளிப்பாடாகும்.
மேலதிகமாக, தமிழர்களுடன் எவ்விதமான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை சிங்கள அரசியல் தலைமைத்துவம் அனுமதிக்காது என்ற விடயத்தை மீள எடுத்தியம்புகிறது என கடிதம் தொடருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொருத்தமான நகர்வுகளை எடுக்குமாறு குறிப்பாக எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை அமர்வு வரைக்கும் வலியுறுத்தவே நான் எழுதுகிறேன்.
தவிர, எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வின் போதான இலங்கை மீதான அறிக்கையில், இச் சம்பவத்தை குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் பாதுகாப்பானது மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண தமிழ் மக்களின் பாதுகாப்பை இலங்கைத் தீவில் ஒருவரால் நினைத்துப் பார்க்க முடியும் என கடிதம் முடிவடைகிறது” - எனக் குறிப்பிட்டுள்ளார்.