வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதில் உருவாகியுள்ள சிக்கல்: வளிமண்டலவியல் திணைக்களங்கள் அறிவிப்பு
இலங்கைக்கான வானிலை முன்னறிவிப்புகளை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் ஆகிய இரண்டினாலும் வழங்க முடியாத ஒரு நிலை உருவாகியிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை கூறியிருந்தார்.
இலங்கை போன்ற ஒரு சிறிய தீவிற்கு வானிலை முன்னறிவிப்புகளை மேற்கொள்வதில் பாரிய சவால்கள் இருப்பதனால் இந்த சிக்கல் உருவாகியுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
விவசாய நடவடிக்கைகள்
இருந்தபோதிலும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் கடும் மழை பெய்யும் எனவும் அது வரையில் வறண்ட வானிலையும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் வானிலை முன்னறிவிப்புகளை வழங்கியுள்ளது.
இதனால் இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள், விவசாய நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைகளிற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான ஒரு ஒரு விரிவான திட்டத்தினை உருவாக்குவதற்காக விவசாய அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அனால் தற்போதுள்ள விவசாயிகளில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருப்பதனால் நவீன தொழில்நுட்பத்திற்கு அவர்கள் பரீட்சயமாவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக இருப்பதாகவும் இது குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
