நிறைவேறியது சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் - படையினரைக் காப்பாற்றுங்கள்; நாடாளுமன்றில் புலம்பிய விமல்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, சிறிலங்காவின் 50 படையதிகாரிகளுக்கு எதிராக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சில நாடுகளில் குறித்த படையதிகாரிகளுக்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்ய முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா படையினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், நாட்டை பாதுகாத்த படையினருக்கு துரோகம் செய்ததைப் போன்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வி
இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது அமைச்சர் அலி சப்ரி, உண்மையை கண்டறியும் பொறிமுறை மேற்கொள்ளப்படுவதாக எவ்வாறு கூறமுடியும் என்றும் பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை எவ்வாறு ஜெனீவா பேரவை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் என்று கேட்ட அவர், இது நம்பிக்கை தொடர்பான பிரச்சினை என்று குறிப்பிட்டார்.
எனினும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் இருந்த நாடுகள், தமது உள்நாட்டு தீர்மானங்களுக்கு இணங்க, செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச 11 ஆயிரம் விடுதலைப்புலிகளை விடுவித்தமை, மற்றும் ரணில் விக்ரமசிங்க தற்போது மேற்கொண்டு வரும் மனித உரிமை செயற்பாடுகளை தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
