மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்த ட்ரம்ப்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஜெனீவாவில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தின.
இராணுவப் பலம்
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளைக் குவித்து இராணுவப் பலத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, அரபு நாடுகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஈரானுடன் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கும் என்ற சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “பயங்கரவாதத்தின் முதன்மை ஆதரவாளரான ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
அடுத்த பத்து முதல் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பொருளாதாரம்
இந்தநிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இதில், அமெரிக்கத் தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் மற்றும் அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கின்றனர்.

ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி இந்தப் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்துள்ளார்.
ஈரானின் பொருளாதாரம் ஏற்கனவே கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன் உள்நாட்டிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், இன்று நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவு போரைத் தவிர்க்குமா அல்லது நேரடி மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |