ஈரான் போரால் முறிவு விளிம்பிற்குக் சென்றுள்ள அமெரிக்க இராணுவம்
மத்திய கிழக்கு முழுவதும் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்காகக் கொண்டு ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைத் திறன் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது.
பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து நேரடி அறிவு கொண்டதாகக் கூறப்படும் இரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தொடர்ச்சியான பதில் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க இராணுவத்தின் போர்த் தயார்நிலை மற்றும் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அழுத்தம் நீடித்தால், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை திறம்பட முன்னெடுக்கும் அமெரிக்காவின் திறன் எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என அதிகாரிகளில் ஒருவர் எச்சரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இராணுவத் தளவாடங்களில் நெருக்கடி
அமெரிக்க இராணுவம் எதிர்கொள்வதாகக் கூறப்படும் முக்கிய சவால்களில், வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு வேகமாக குறைந்து வருதல், இராணுவ வீரர்கள் உயிரிழத்தல் மற்றும் காயமடைதல், இராணுவ உபகரணங்களின் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், வீரர்களை நீண்டகாலம் ஓய்வின்றி பணியில் வைத்திருக்க வேண்டிய நிலை, விநியோகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.

இந்த நிலை அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரவு-செலவுத் திட்டத்திலும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்க இராணுவத்தின் தயார்நிலை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதில் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், ட்ரம்ப் நிர்வாகம் ஈரானின் உண்மையான இராணுவ திறனை போதுமான அளவில் மதிப்பிடத் தவறியதாகவும், இந்த மோதலுக்காக வொஷிங்டனிடம் போதுமான திட்டமிடல் இருக்கவில்லை என்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இடைகால தேர்தலுக்கு முன்னதாக வொஷிங்டனுக்கு பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஈரான் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மதிப்பிட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |