14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் - 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
14 வயது சிறுமியை தவறான முறைக்கு உட்படுத்திய பாதுகாவலருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில், பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமாகியமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட காவல்துறை புலன் விசாரணைகளின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த பிரதிவாதிக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமறைவாகிய எதிரி
அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றபகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பிரதிவாதிக்கு தலைமறைவாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து பிரதிவாதிக்கு இல்லாத விளக்கத்துக்கு நியமிக்கப்பட்ட இவ்வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயால் நெறிப்படுத்தபட்டிருந்தது.
கடூழிய சிறைத்தண்டனை
குறித்த விசாரணைகளின் பின்னர் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுநர் தரப்பு குறித்த எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதன் பிரகாரம் பிரதிவாதிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம், மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டுமென தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
குறித்த குற்ற செயலின் போது பிரதிவாதியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், குறித்த சிறுமி கர்ப்பம் தரித்தமை, எதிரி வழக்கு விசாரணைகளில் இருந்து தலைமறைவாகியமை.
மற்றும் சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்ற காரணிகள் எதிரிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளது என மேல் நீதிமன்ற நீதிபதி ஏ ஏ ஆனந்தராஜா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |