வவுனியா இரட்டை கொலை : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
வவுனியா (Vavuniya) - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் இன்று (06.03.2025) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா முன்னிலையாகி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு சமர்ப்பித்தார்.
அதனை மறுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதிகளால் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இவற்றை கவனம் செலுத்திய உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
