அதிகாலை வேளை ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!
வவுனியாவில் குடும்பஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் இன்று அதிகாலை இவர் மீட்கப்பட்டு நோயாளர் காவுவண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டவர், சுப்பிரமணியம் கண்ணன் வயது 33 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்ற நபர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அதிகாலை 1 மணியளவில் கங்கன்குளம் சந்திப் பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து அப்பகுதி மக்களின் துணையுடன் நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இளம் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.