மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வவுனியா வடக்கு தவிசாளர்: அமர்ந்திருந்த வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
வவுனியா வடக்கு (vavuniya north)பிரதேச சபை தெரிவின் போது தவிசாளர் தி.கிருஸ்ணவேணி சபையில் மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினார். இதன்போது வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எழுந்து அஞ்சலி செலுத்தாது அமர்ந்திருந்தமை பலரையும் விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு நேற்று மாலை வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி தலைமையில் இடம்பெற்றது.
முதலில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. தவிசாளராக திருநாவுக்கரசு கிருஷ்ணவேணி தெரிவானார்.
மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி
அவரை அழைத்து அவருக்கான இருக்கையை வழங்கிய வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நன்றி கூற தவிசாளரிடம் ஒலிவாங்கியை கையளித்தார்.
இதன்போது மண்ணுக்கான போரில் வீரச்சாவடைந்த எங்களது மாவீரர்களுக்காகவும் இப்போரின் போது கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்காகவும் இரண்டு நிமிடம் அகவணக்கம் செலுத்துவோம் எனக் கூறி எழுந்து அகவணக்கம் செலுத்தினார்.
இதனையடுத்து சபையில் இருந்த பெரும்பான்மை இன உறுப்பினர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும், சபை தெரிவுக்கு பிரசன்னமாகி இருந்த அனைவரும் எழுந்து அக வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கம் செலுத்தாது அமர்ந்திருந்த ஆணையாளர்
இதனை சற்றும் எதிர்பாராத வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எழுந்து அகவணக்கம் செலுத்தாது இரண்டு நிமிடமும் அமர்ந்திருந்தார்.
சபை அமர்வில் கலந்து கொண்டவர்களிடையே இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
