ரிஷாட்டை விடுதலை செய்யக்கோரி ஒன்று திரண்ட மக்கள்!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்பாட்டகாரர்கள்,
ரிஷாட் பதியுதீனை அதிகாலையில் சென்று கைது செய்யப்பட்டதையிட்டு வேதனையடைகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினரான அவரை கைதுசெய்வதாக சபாநாயகருக்கு கூட அறிவித்தல் விடுக்கப்படவில்லை. அவரது கைதுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
அரசாங்கம் தன்னுடைய தோல்வியை மறைப்பதற்காக இவ்வாறான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது. சிறுபான்மை சமூகங்களிற்கு முன்னெடுக்கப்படும் அநீதிகளிற்கெதிராக வீதியில் இறங்கியே நாம் போராட வேண்டியுள்ளது. எனவே எமது தலைவரை விடுவிக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்காததற்காகவா இந்த கைது, சிறுபான்மை தலைமைகளை விடுதலைசெய், உண்மையான சூத்திரதாரிகளை கைதுசெய், அரசே பழிவாங்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன்போது வவுனியா நகரசபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ரி. கே. இராசலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரிப், அப்துல் பாரி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.







