10 ஆம் தர மாணவனை தாக்கிய ஆசிரியர் - விசாரணைகள் தீவிரம்
வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் தர மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் காதில் அறைந்து தாக்கியதால் மாணவனின் செவியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணிப்பாளரின் விசாரணை

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனை குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த பாடசாலை அதிபர், இதனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக வவுனியா
தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.