வாகனங்களின் விலையில் ஏற்படும் மாற்றம்! அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார்.
குறித்த வரி தொடர்பில் கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
வரி அறவீடு
இது 2026 வரவுசெலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வரி என்றும் இந்த வரி அறவீடானது சுங்கத் திணைக்களத்திலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அரோஷ கூறியுள்ளார்.

எனினும், தற்போது சுங்கத்தில் விடுவிப்புச் செயற்பாடுகளில் உள்ள வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது எனறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதால், 2.5% வரி என்பது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என அரோஷ ரோட்ரிகோ குறிப்பிட்டுள்ளார்.
விலை அதிகரிப்பு
அதன்படி, 100 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள ஒரு வாகனத்தின் விலை, இந்த வரி காரணமாக சுமார் இரண்டரை இலட்சம் ரூபாயினால் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த வரிச் சுமையால் வாகன விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம்.
எவ்வாறாயினும், 'டித்வா' (Ditwa)புயல் பாதிப்புகளுக்குப் பின்னர், தற்போது மக்கள் மத்தியில் வாகனங்களைக் கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |