யாழில் கடத்தப்பட்ட யுவதி: திடீரென வெளியிட்ட பகீர் தகவல்
யாழில் (Jaffna) கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த யுவதி தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை காணொளியொன்றை வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.
பிரிவதற்கு விருப்பம்
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்த போதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தலாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும் போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றதாக தெரவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதையடுத்து, காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் நடவடிக்கைள் இடம்பெற்ற நிலையில் குறித்த யுவதி தான் கடத்தப்படவில்லை என கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளியில் அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னை யாரும் கடத்தவில்லை, நான்தான் என்னை அழைத்து செல்லுமாறு என் அண்ணாக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன்.
அதனால்தான் அவர்கள் என்னை கூட்டு கொண்டு சென்றனர், யாரும் என்னை தேட வேண்டாம், அடுத்த வழக்கிற்கு நான் நீதிமன்றத்தில் முன்னிலை ஆகுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
