அரசின் தீர்மானத்தினால் பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தி
அரசின் 10 பங்காளிக் கட்சிகள் இணைந்து இரகசிய சந்திப்பை நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.
கொழும்பிலுள்ள கம்மியுனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இக்கட்சிகளின் தலைவர்கள் பேச்சு நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, தயாசிறி ஜயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, வீரசுமன வீரசிங்க உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றதாக கூறப்படுகின்றது.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் 40 வீதப் பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தினால் அரசின் பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன.
அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அவரை நேரடியாக சந்தித்து பேச்சு நடத்த இவர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அதிகபட்ச தீர்மானத்தையும் இவர்கள் எடுக்கக்கூடும் என்றே கூறப்படுகின்றது.