அமெரிக்க நிறுவனத்தால் அதிரும் கொழும்பு அரசியல்
தென்னிலங்கையிலுள்ள கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலைய விவகாரம் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அரசாங்கத்திலுள்ள பிரதான பங்காளிக் கட்சிகள் கொழும்பில் திடீர் சந்திப்புக்களை நடத்திவருகின்றன.
அரசாங்கத்திலுள்ள விமல் அணியினர் கொழும்பில் நேற்று இரவு 05 மணிநேர சந்திப்புக்களை நடத்தியுள்ளதோடு, ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தலைமையில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா - கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது குறித்த ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் கடந்த மாதத்தில் செய்துகொண்டது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் உள்ள பிரதான 10 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பை பிரதிபலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajabaksa) தலைமையில் இன்று மாலை நடைபெறும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்விக் கணைகளைத் தொடுப்பதற்கு விமல் அணி தீர்மானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் விமல் அணியைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு அமைச்சரது இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தியிருந்தனர். இதில், பசளை நெருக்கடி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கெரவலப்பிட்டி விவகாரம், திருகோணமலை எண்ணெய் கிணறுகள் விவகாரம், ஆசிரியர்கள் சம்பள உயர்வு பற்றி இந்த சந்திப்பில் கேள்விகளை எழுப்ப தீர்மானித்திருக்கின்றனர்.
சுமார் 05 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற 10 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலைய விவகாரம் குறித்து ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான விசேட பேச்சுவார்த்தை கொழும்பில் இன்றைய தினம் மாலை நடைபெறவுள்ளது. கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு இதில் ஆளுங்கட்சியிலுள்ள பிரதான பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர முன்னின்று உழைத்த கொழும்பு அபயராமய விகாரையின் தலைமை தேரரான முருந்தெட்டுவே ஆனந்த தேரர்(muruthedduwe anantha thero) தலைமையில் நேற்று பிற்பகலில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்கா எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ(sajith premadasa), தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran), ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
உள்நாட்டு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்ற தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நிறுத்துவது பற்றி நீண்டநேரம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.