'பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடைபவனி' தமிழர் தரப்புக்கு அழைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான நடைபவனியை ஆரம்பிக்கவுள்ளதாக வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.
இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், இந்த நடைபவனியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இன்று மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சிவாரப் பிரகடனம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈத்த உறவுகளுக்கான கஞ்சிவாரம் இன்று மூன்றாவது நாளாகவும் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
12ஆம் திகதி தொடங்கிய இந்தக் கஞ்சிவாரம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முன்றலில் நிறைவடையவுள்ளது.
நாளை நடைபெறவுள்ள பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனிக்கு எட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் பாதிரியார்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மீனவ சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்கங்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.30இற்கு நடைபவனியானது பொத்துவிலில் ஆரம்பித்து திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி ஊடாக கல்லடி பாலம் வரையில் வருகைதந்து அன்றைய தினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி கல்லடி பாலத்தில் விநியோகிக்கப்பட்டு நாளை மறுதினம் (16ஆம் திகதி)திங்கட்கிழமை திருகோணமலை நோக்கி பயணம் அமையும்.
17ஆம் திகதி திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவினை சென்றடைந்து 18ஆம் திகதி முல்லைதீவிலிருந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்று அங்கு உயிர்நீர்த்த, படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு நினைவேந்தல் வாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.
இதேபோன்று யாழ்ப்பாணத்திருந்தும் நடைபவனி ஆரம்பமாகி 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலினை வந்தடையும்.
இன்று எங்களுக்காகவும் தமிழ் உறவுகளுக்காகவும் இளம் தமிழ் சமூகம் இந்த மண்ணில் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டது எங்கள் உயிர்கள் அது கிழித்தெறிவதற்கு கடிதாசிகளும் அல்ல, பிசைந்தெறிவதற்கு வேறு பொருட்களும் அல்ல. விலைமதிக்க முடியாத உயிர்களையே நாங்கள் தொலைத்து நிற்கின்றோம்.
இறுதி யுத்ததின்போது ஒரு இலட்சத்தி 47ஆயிரம் உறவுகளுக்கு மேல் நாங்கள் இழந்து நிற்கின்றோம். முள்ளிவாய்க்காலில் வரிசையில் கஞ்சிக்காக குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என நீண்ட வரிசை நின்றுகொண்டிருந்தபோது விமானப்படையினர் அவர்கள் மீது குண்டுவீசியதால் அந்த வரிசையே இரத்தஆறாக ஓடியது.
அங்கு இருந்த பிள்ளையொன்று இறந்துகிடந்த தனது தாயின் கையிலிருந்த கஞ்சிக் கோப்பையினை எடுத்து உண்ட காட்சியை கண்டவள் நான் என்ற அடிப்படையில் இவ்வாறான சம்பங்களை மறக்கமுடியாது. இவ்வாறான சம்பவங்கள் எமது உறவுகளுக்கு எந்தக் காலத்திலும் நடக்ககூடாது” என்றார்.