புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 38 வயதுக் குடும்பஸ்தர் பலி - 8 பேர் கைது
புத்தளத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (09-06-2026) அதிகாலை வணாத்தவில்லு காவல் பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் எட்டுப் பேரை வணாத்தவில்லு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதுகாப்பதற்காகக் குத்தகை
காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள ஆரம்பகட்ட விவரங்களின்படி சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான கரைத்தீவு பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவுடைய முந்திரித் தோட்டம், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முந்திரி அறுவடை செய்வதற்காகக் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
அந்த முந்திரித் தோட்டத்தின் விளைச்சலைப் பாதுகாப்பதற்காகக் குத்தகையாளரால் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அந்த முந்திரித் தோட்டத்துக்குள் இரகசியமாக நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வாயுத் துப்பாக்கி (Air Rifle) மூலம் சுட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உடலின் முக்கிய பாகங்களில் கடுமையான காயங்களுக்குள்ளான பிரதீப் சுசந்த, அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டுப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை
எனினும் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியவர் உட்பட இதுவரை 8 சந்தேகநபர்களை வணாத்தவில்லு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குத் தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களைப் புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை வணாத்தவில்லு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்