தமிழருக்கான உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை சுதந்திர தினம் எமக்கு இல்லை!
தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியையும் வரவேற்றுள்ளார்.
பேரணியை வரவேற்ற விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றதை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“நான் 1958 இல் சுதந்திர தின அணிவகுப்பு அணியில் இணைந்திருந்தேன், அதன் பின் இதுவரை சுதந்திர தினங்களில் கலந்துகொள்வதில்லை.
ஏனெனில் தமிழர்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் எமக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இம்முறை மான் சின்னத்தில் களமிறங்குகின்றோம்.
முதல் முதல் தேர்தலில் அறிமுகமாகும் சின்னம்
இதனுடைய முக்கியத்துவம் யாதெனின் மான் சின்னம் முதல் முதல் தேர்தலில் கலந்துகொள்கின்றது. இந்த தேர்தலில் மான் சின்னத்தில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
எனவே தேர்தல் நடவடிக்கைகளின் போது மக்களை எவ்வாறு கவர வேண்டும், மக்களுடன் எவ்வாறு இணைந்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளார்.

