எரிபொருள் பற்றாக்குறை : நிலைமையை விளக்கிய ஜனாதிபதி அநுர
புதிய இணைப்பு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறி்த்து இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.அதில் அவர் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி உட்பட முக்கிய விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
"எரிபொருளுக்காக நாம் நீண்டகால டெண்டர்களை வழங்கியிருந்தோம். எனினும், குறிப்பாக தலா 90,000 மெட்ரிக் தொன் கொண்ட இரு நீண்டகால டெண்டர் கப்பல்களை உரிய காலத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. எமது தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய ஒரு கப்பலும் உரிய நேரத்திற்கு வராது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தில் ஒரு குறைபாடு காணப்படுகிறது. ஒரு கப்பல் தாமதமானாலும் அது முழு விநியோக வலையமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் இலக்கு வைத்த எரிபொருள் விநியோகம் எமக்குக் கிடைக்கவில்லை.
தற்போது நாம் இராஜதந்திர மட்டத்தில் சில தலையீடுகளைச் செய்துள்ளோம். இரண்டாவதாக, சில அவசர டெண்டர்களைக் கோரியுள்ளோம். டீசல், கச்சா எண்ணெய், மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நாம் கோரிய டெண்டர்களுக்கு மிக நம்பிக்கையான விநியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.
டொலர்களில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களது வர்த்தகத் தேவைக்கான எரிபொருளை அவர்களே இறக்குமதி செய்துகொள்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளோம்.
மார்ச் மாதத்திற்கான எரிவாயுத் தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்த போதிலும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தைத் தடை செய்துள்ளமையால் நாம் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்திருந்தோம். அந்த 38,000 மெட்ரிக் தொன்னும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் ஒரு எரிவாயு கப்பலை நாம் ஓடர் செய்துள்ளோம், அது நாளை அல்லது மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது. எனவே எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது.
எரிவாயு, நிலக்கரி மற்றும் எரிபொருளை எமது இராஜதந்திர உறவுகள் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்குப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
QR குறியீடு முறைமையில் சில சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம். சில சிக்கல்கள் எழும் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததால்தான் ஞாயிற்றுக்கிழமை தினத்தை இதற்காகத் தேர்ந்தெடுத்தோம். தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இதில் பதிவு செய்துள்ளனர். தேசிய கட்டமைப்பு ரீதியில் சிக்கல்கள் வரக்கூடும் என்பதைத் தெரிந்தே நாம் இதனை முன்னெடுத்தோம்."
முதலாம் இணைப்பு
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று இரவு (17) ஒரு சிறப்பு ஊடக சந்திப்பை நடத்த உள்ளார்.
இதனை அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று(17) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்ற உரை
“வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு ஒரு ஊடக சந்திப்பும் நடத்தப்படும்.

அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி மட்டத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த அவர்கள் விரும்பினால், வெள்ளிக்கிழமை அன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |