சிறிலங்காவுக்கு எதிராக கனடாவில் வலுக்கும் பிரசாரம்
சிறிலங்காவில் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற குற்றங்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கனேடிய சட்ட ஆலோசகரும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணியுமான டேவிட் மட்டாஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் வியாபித்து வாழும் பெரும் எண்ணிக்கையான ஈழத் தமிழ் அகதிகள் தோற்றம் பெறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான மிகமோசமான மீறல்களால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்வதற்கான பிரசாரத்தை கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழர் உரிமைக்கான குழுமம் ஆரம்பித்துள்ளது.
இதன் ஓரங்கமாக இது குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கனடாவின் டொரொன்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி தொழில்நுட்பம் ஊடான ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிட்ட டேவிட் மட்டாஸ் இறுதிக்கட்டப்போரில் இடம்பெற்ற குற்றங்கள் சர்வதேச ரீதியில் மிகுந்த அவதானத்திற்குரியவை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சிறிலங்காவில் அதிகாரத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் தம்மைத்தாமே தண்டனைகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருப்பதுடன் அர்த்தமுள்ள நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையை முன்னெடுத்துச் செல்வதிலும் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.
எனவே சிறிலங்காவிற்கு வெளியிலேயே இதற்கான நீதியை உறுதி செய்துகொள்ளமுடியும். இந்தக் குற்றங்கள் சர்வதேச அளவில் மிகுந்த அவதானத்திற்குரியவை.
இவ்விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எவ்வாறு நாடுவது என்ற கேள்வி காணப்படுகின்றது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான பூர்வாங்க ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழர் உரிமைக்கான குழுமத்தினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் நீதிமன்றச் செயற்பாடுகளுக்கு அவசியமான சமர்ப்பணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது என்பது சர்வதேச சமூகத்தைப் பொறுத்தமட்டில் புதியதொரு தலைப்பல்ல.
யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து தற்போது வரை இவ்விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக அவதானம் செலுத்திவருவதுடன் அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றது.
எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகிய இரு சர்வதேச மனித உரிமைக் கட்டமைப்புக்களையும் எவ்வாறு ஓரணியில் கொண்டுவருவது என்பதே தற்போதுள்ள சவாலாகும்” எனக் கூறியுள்ளார்.