ஈரான் வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்: வெடிவிபத்தில் மாலுமி பலி
காஸ்பியன் கடலில் ஈரானுடன் தொடர்புடைய வர்த்தகக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் கடுமையாக கண்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட வெடி விபத்தில் மாலுமி ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை "ஆக்கிரமிப்புச் செயல்" என்றும், "பகைமையான மற்றும் குற்றவியல் தாக்குதல்" என்றும் ஈரான் கூறி உள்ளது.
வெடிவிபத்தில் மாலுமி உயிரிழப்பு
இதற்கு எதிர்ப்பை தெரிவிக்க, தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் பொறுப்பாளரை ஈரான் வெளியுறவு அமைச்சகம் அழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா பயன்படுத்தி வரும் ஈரான் வடிவமைத்த ஆளில்லா விமானத் தாக்குதல்களை கீவ் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரானுக்கு ஏதுவாக, ரஷ்யா தனது செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை அந்நாட்டிற்கு வழங்கி வருவதை கீவ் கவனித்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
காஸ்பியன் கடலில் ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றையும், ஈரானுடன் தொடர்புடைய இராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களையும் உக்ரைன் படைகள் தாக்கியதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
மேலும் அவருடைய X தளத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களில், உக்ரைன் ஜனாதிபதி, ஜூலை மாதத் தொடக்கத்தில் இருந்து "வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ரஷ்யாவின் தீவிர செயற்கைக்கோள் கண்காணிப்பை" கீவ் பதிவு செய்து வந்ததாகவும், "இந்தக் காட்சிகள் பின்னர் ஈரானில் வெளிவருகின்றன" என்றும் கூறினார்.
"அதே நேரத்தில், இந்த இடங்கள் குறித்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் படங்களுக்கும் ஈரானியத் தாக்குதல்களுக்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. தாக்குதல்களுக்கு முன்னரும், அவற்றுக்கான தயாரிப்பாகவும், பின்னரும், ஏற்படுத்தப்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காகவும் இந்தத் தொடர்பு காணப்படுகிறது," என்று ஜெலென்ஸ்கி கருத்து வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |