யாழில் அரச அதிகாரியின் அலட்சிய பதிலால் ஆத்திரமடைந்த பிரதேச மக்கள்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவனம் வீதிகளை அகழ்ந்து நன்னீர் குழாய்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் குடியிருப்பு பகுதிகள் காணப்படும் வீதிகளுக்கு அருகில் வீதிகளைக் அகழ்ந்து குழாய்களை அமைத்து வருகின்றனர்.
பொய் வாக்குறுதி
இந்தநிலையில், குழாய்களை அமைத்த பின் குறித்த வீதிகளை புனர்நிர்மானம் செய்யாமல் அலட்சியமாக விட்டு செல்வதனால் மருதங்கேணி உள்ளக வீதிகள் பெரும் சேதத்துக்குள்ளாகி பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் உள்வீதியால் பயணிக்க தடை காணப்படுகின்ற வேளையிலும் கனரக வாகனங்களை உள்வீதி ஊடாக கொண்டு வந்து வீதிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உரிய முறையில் மருதங்கேணி பிரதேச மக்களால் நன்னீர் திட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கடந்த ஆறு மாதங்களாக பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
மக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்தி விட்டு நன்னீர் திட்ட அதிகாரிகள் ஏனைய பகுதியில் தமது வேலையை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளை குறித்த இடத்தில் அதிகளவான இளைஞர்கள் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் குறித்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடனடியாக வேலையை நிறுத்துமாறு பணித்ததுடன் நீங்கள் சேதப்படுத்திய வீதியை புனர்நிர்மாணம் செய்து தந்த பிறகு ஏனைய வேலைகளை தொடருமாறு அப்பகுதி இளைஞர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும், தாளையடி நன்னீர் திட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான பரிதா, மோட்டார் சைக்கிளை விட்டு கீழே இறங்காமல் தான் தோன்றித்தனமாக பதில் அளித்ததாகவும் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேல் அதிகாரியை அழைத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படுமோசமான முறை
குறித்த இடத்திற்கு சென்றிருந்த மேலதிகாரி ஒருவர் நேற்று (03) காலை ஒன்பது மணிக்கு முன்பு உரிய பதிலை வழங்குவதாக தெரிவித்து தாம் மேற்கொண்ட ஏனைய வேலைகளையும் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் வேலாயுதம் சசிகாந்த், குறித்த வீதியை பார்வையிட்டதுடன் குறித்த வீதி மிகப் படுமோசமான முறையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணம் செய்ய முடியாத அளவு அந்த வீதியைக் கிண்டி சேதப்படுத்தி விட்டு அலட்சியப் போக்குடன் அதிகாரிகள் நடந்துகொள்வதாகவும் கண்டித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு வாக்குகேட்டு வாசல் படி ஏறி வந்த குறித்த தேசிய மக்கள் சக்தி அதிகாரி தற்போது வெற்றி பெற்ற பிறகு மக்களை மதிக்காமல் மக்களது கருத்துக்களை இறங்கிவந்து கேட்டு அறியாமல் மோட்டார் சைக்கிளில் இருந்தபடியே தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
