அரசியல்வாதிகளே வாக்குகள் மட்டும் போதுமா! பாலமீன்மடு மக்களின் குமுறல்
மட்டக்களப்பு பாலமீன்மடு கடற்றொழிலாளர் எழுச்சி கிராமத்தில் வாழும் 30 குடும்பங்கள் மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் கடந்த 20 வருடத்துக்கு மேலாக சொல்லனா துன்பத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஓலை குடிசைகளில் வாழ்ந்து வரும் குறித்த மக்களின் குறைகளை தீர்க்காத அரசியல்வாதிகள், அதிகாரிகளா தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க போகின்றார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஒரு சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
முன்னாள் போராளி நவராஜ்
அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் கிராமத்தில் ஒரு சிலர் குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
மலசலகூடம் , குடிநீர் , மின்சாரம் இன்றி ஒரு நகர் பகுதியில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற முன்னாள் போராளியும் 2 பிள்ளைகளின் தந்தையும் மீனவருமான அமர்தலிங்கம் நவராஜ் தெரிவிக்கையில்,
''பாலமீன்மடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டு பிறந்த நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த பின்னர் திருமணம் முடித்து, இருப்பதற்கு சொந்தமாக காணி,வீடு,மலசலகூடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
நாங்கள் பரல் வைத்து கிணறு அமைத்து தண்ணீர் பெற்று வருகின்றோம்.
எனது பிள்ளைகள் மனைவி தொழு நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் நிலையில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மலசல கூடம் அமைத்து தருவதாக முன்வந்த போதிலும் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் இது அரச காணி, கடல் பாதுகாப்பு வலையம் என தெரிவித்து அனுமதிதர மறுத்து வருகின்றனர்.
இங்கு அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகிலுள்ள முழு அரச காணிகளையும் பெரிய பணக்காரர்களுக்கு வழங்குகின்றன நாங்கள் ஏழைகள் காணி இல்லாமல் வீடு இல்லாமல் வாழுகின்ற எங்களுக்கு ஒரு 10 பேச்; காணி தருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
55 வயதுடைய பெண்ணின் கருத்து
இந்த கிராமத்தை பூர்வீகமாக கொண்ட 55 வயதுடைய பெண் ஒருவர் கூறுகையில்,

நான் அடிப்படை வசதி எதுவும் இன்றி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் நானும் கணவரும் வாழ்ந்து வருகின்றோம்.
இங்கு முதல் பிரச்சினை 30 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். இங்கு இளம் யுவதிகள், வயது முதிர்ந்தோர் இருக்கின்றனர். அவர்களுக்கு மலசலகூடம், கிணறு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர் எந்தவொரு கவனமும் எடுக்கிறார்கள் இல்லை. பெண்கள் காட்டுக்குள் மலசலம் கழிக்க செல்லும் போது அதை காணொளி எடுத்து முகநூல்களில் பதிவிடுகின்றனர்.
இதை கேட்க ஒருவரும் இல்லை, தேர்தல் காலத்தில் மட்டும் அரசியல்வாதிகள் வருவார்கள், 'எங்களுக்கு வாக்கு போடுங்க' அதை செய்கின்றோம் இதை செய்கின்றோம் என்று தெரிவிப்பார்கள் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் எதுவும் செய்ததும் இல்லை வந்ததும் இல்லை.
எனவே எங்களின் அடிப்படை உரிமையான மலசலம், குடிநீர், மின்சாரத்தை செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம்.
அரச காணி என தெரிவித்து கொண்டு எங்களுக்கான ஆவணங்களை தரமறுக்கின்றதுடன் பரலில் கிணறு அமைத்து கறல் குடிநீரை பெற்று வருவது கூட பொது சுகாதார பரிசோதகர்கள் கூட வந்து எங்களை பார்ப்பதில்லை, ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் எல்லோரும் வருகின்றனர்.
எங்களுக்கு பக்கத்தில் அரச காணி அதிகமாக இருக்கின்றது, அதை பணம் படைத்தவர்கள் பிடித்து வேலிநாட்டி ஒரு வியாபாரமாக விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
கேட்டால் அவர்களுக்கு உரிய காணி என பொய் சொல்கின்றனர் ஆனால் அது முழுக்க அரச காணி, இது தொடர்பாக அரச அதிகாரிகளே, அரசியல்வாதிகளே எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்த கடற்றொழிலாளர் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று நிர்மாணிப்பதற்காக 2014ம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இதன்போது பாலைமீன்மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு எதிர்த்து அதை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.
இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம் இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத நாங்கள் குடியிருப்பது அனர்த்த வலயமா?
ஏழைகள் காணி இல்லை என 10 பேச் காணியை அடைத்தால் சட்டம் வெகு வேகமாக எங்கள் மீது பாயும்.
அதே நேரத்தில் சண்டியர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் பணபலம் படைத்தவர்கள் காணிகளை அடாத்தாக பிடித்து விற்பனை செய்யும் போது சட்டங்கள் அவர்களுக்கு எதிராக பாய்வது மிகவும் குறைவு.
எனவே பணக்காரர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு ஒரு சட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவே நீண்ட காலமாக குடியிருக்கும் 30 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள். இதில் இருந்து யாரும் எழும்ப போவதில்லை'' என்றார்.
65 வயது கடற்றொழிலாளர்
கடற்றொழிலாளரான 65 வயதுடைய வைரமுத்து அமிர்தலிங்கம் தெரிவிக்கையில்,

"இந்த கிராமத்துக்கு வந்து 10 வருடம் குடிப்பதற்கு குடி நீரை பெறுவதற்கு பணம் இல்லாத காரணத்தால் நில மட்டத்தில் பரல் அமைத்து குடிநீர் பெற்று வருகின்றேன் இந்த நிலையில் கிராம உத்தியோகத்தர் வந்து உங்களுக்கு காணிக்கு உறுதி இல்லை வேறு இடத்தில் தருகிறேன் என தெரிவித்து ஒன்றும் தரவில்லை.
நாங்கள் இந்த ஓலை குடிசையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம் குடிநீர், மலசல கூடம் இல்லை இவ்வாறு அரசாங்கம் எங்களுக்கு செய்கிறது,
2200 ரூபா கியுபார் போட்டு 1200 ரூபாவை தந்தார்கள், பின்னர் 4 மாதத்தில் அதனையும் நிறுத்தினர் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் அரசாங்கம் யோசித்துக் கூட பார்க்கிறார்கள் இல்லை.
நான் தோணியில் சென்று கஷ்டத்தின் மத்தியில் மீன் பிடித்து வருகின்றேன் இன்று எனது வாழ்கையை பாருங்கள் உதவித்தொகை பணமும் இல்லாது தத்தளிக்கிறேன் மனைவி மலசலம் கழிக்க போவது என்றால் நான் காட்டுக்கு கூட்டிச் சென்று நிற்க வேண்டியுள்ளது.
எனவே ஏதாவது நன்மையை செய்து உதவுங்கள், அரசாங்கம் உதவி செய்ய வேண்டும், 'இதைவிட என்னத்தை சொல்லமுடியும்' கடற்கரையில் ஓலை மட்டையை நாட்டி மறைத்து கொண்டு பெண்கள் மலம் கழிக்க வேண்டிய காலமாக உள்ளது என கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்".
கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாய்
கணவனை இழந்த ஒரு பிள்ளையின் தாயார் தெரிவிக்கையில்,

"ஓலைக்குடிசையில் கடந்த 12 வருடமாக நானும் எனது மகனும் வாழ்ந்து வருகின்றேன் நான் வீட்டு வேலைக்கு சென்று வேலை செய்து வருகின்ற வருமானத்தில் வாழ்ந்து வருவதுடன் மலசல கூடம் குடிநீர். மின்சாரம் இன்றி குப்பி விளக்கில் எனது மகன் கல்வி கற்று க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்திற்கு சென்றுள்ளார்.
இது வரை எங்களுக்கு எந்த விதமான உதவிகளும் கிடைக்கவில்லை,
வீட்டுக்கு ஆவணம் கூட இதுவரை தரவில்லை உடைந்த ஓலைக்குடிசை கூட திருத்த முடியாது துன்பப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனவே அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யவும்" என்றார்.
இவ்வாறு நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் நகர்ப்புறத்தில் இருக்கும் இந்த கடற்றொழிலாளர் எழுச்சி கிராம மக்களுக்கு அடிப்படை மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளது எனவே இந்த மக்களின் அடிப்படையான குடிநீர், மலசல கூடம், மின்சாரம் போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டியது அரச அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளின் கடைப்பாடு ஆகும். என்பதை சம்மந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டு இந்த ஏழை மக்களின் சொல்லோன துன்பங்களுக்கான தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15