திடீரென பதவி விலகிய நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் - புதிய தலைவர் பரிந்துரை!
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் இன்று(15) அறிவித்துள்ளார்.
இதேவேளை பதவி விலகல் கடிதத்தை அவர் இன்று அதிபரின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தணிக்கும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக, நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக பல உதவி திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
பொருளாதார நெருக்கடி

இதற்கமைய நாட்டு மக்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கக்கூடிய அரசின் முக்கிய துறையின் ஓர் அம்சமாக நலன்புரி நன்மைகள் சபை காணப்படுகின்றது.
மேலும், நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தீர்த்து மக்களுக்கு உதவும் வகையில் அதிபரினால் அண்மையில் 'அஸ்வெசும' நலன்புரி உதவித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரான பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை தற்போது அனைவரின் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதேவேளை, இலங்கை நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஜயந்த விஜேரத்னவை ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் சபையின் தலைவராக நியமிக்குமாறு அதிபர் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.