17 வயது ஆவணமும் - 19 வயது அறிக்கையும்! அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் எது உண்மை!
அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் உத்தரவை மீறி செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த விவகாரம் யாழில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் காவல்துறை அறிக்கையில் 19 வயது என கூறியள்ளனர். எனினும் அவருடைய பிறப்பு சான்றிதலில் 17 வயது என்றே காணப்படுகிறது.
இதனை எமது ஊடகம் அவரது உறவினர் ஒருவரின் உதவியுடன்(சித்தி) உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது 2008 நவம்பர் 9ஆம் திகதி பிறந்தவரே 17 வயது அகவையை உடைய அல்பினோ அருள் பயாஸ் என்ற சிறுவனே இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகியவர்.
குறித்த சம்பவம் நேற்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அல்பினோ அருள் பயாஸ் தலையில் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஆக இங்கு எழும் கேள்வி அல்பினோ அருள் பயாஸுக்கு வயது 17தானா, அல்லது காவல்துறை கூறுவது போல 19 வயதா?
காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, அல்லைப்பிட்டிப் பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வயது விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை வெளியிட்டுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் 19 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் தகவலின்படி, அவர்களது உத்தரவை மீறி சென்றதாக கூறப்படும் “ஹயஸ்” ரக வாகனத்தை நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட சூழ்நிலையிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வழங்கிய தகவலின்படி, சம்பவத்தில் உயிரிழந்தவர் 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தவர் என்றும், அவரது பிறப்பு சான்றிதழிலும் வயது 17 எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் காவல்துறை வெளியிட்ட வயது தகவல் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் காணப்படும் விவரங்கள் இடையே கணிசமான முரண்பாடு உருவாகியுள்ளது.
“எங்கள் மகன் இன்னும் 18 வயதையும் எட்டவில்லை. பிறப்பு சான்றிதழ் உள்ள நிலையில் 19 வயது என எப்படி கூறப்படுகிறது?” என குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, சிறுவர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தால், அது மிகுந்த பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வயது தொடர்பான தவறான தகவல் எவ்வாறு வெளியிடப்பட்டது?
அது ஒரு நிர்வாகப் பிழையா?
அல்லது சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து காட்டும் முயற்சியா?
என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. சட்ட நிபுணர்கள் கூறுவதாவது, உயிரிழந்தவரின் சரியான வயது உறுதி செய்யப்படுவது விசாரணையின் முக்கிய அம்சமாகும்.
குறிப்பாக, சிறுவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தால், சட்ட ரீதியாகவும் மனித உரிமை அடிப்படையிலும் விவகாரம் வேறுபட்ட பரிமாணத்தை எடுக்கும்.
இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.
சம்பவத்தின் முழு உண்மையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.
காவல்துறையினர் வயது விவகாரத்தில் மேலதிக விளக்கம் அளிப்பார்களா?
பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக பரிசீலிக்கப்படுமா?
என்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம், சட்ட நடைமுறையாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு எவ்வளவு அவசியமானவை என்பதையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
அத்தோடு, குறித்த வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும், தலா 2 சரீர பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் புதன்கிழமை நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து , பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.
அதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும் , கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்கு படுத்தி தருவதாக கூறியதால் , அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.
இதில் குறித்த சிறுவனின் சித்தப்பாவும் உள்ளடங்குகிறார். உயிரிழந்த சிறுவனின் சித்தப்பா தான் முன்னதாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.
தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்ட போது வாகனத்தை அவர் வழங்கியுள்ளார். இதன்போதே வாகனத்தை ஓட்டி சென்ற வேளை அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறை மறித்த போது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தியுள்ளார்.
அவ்வேளை மண்டைதீவு காவலரணில் நின்ற காவல்துறையினர் வாகனத்தை மறிக்க தயாராக இருந்த வேளை மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பிய வேளை எம்மை பின் தொடர்ந்து வந்ததாக சிறுவனின் சித்தப்பா கூறியுள்ளார்.
“காவல்துறையினர் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது.
அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார்.
பின்னர் காவல் அதிகாரிகள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.
வாகனத்தில் இருந்த சாணகம் , கயிறு , வாள் , வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது” என தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , குறித்த நபர்கள் தீவகத்தில் சட்டவிரோதமாக மாடுகளை பிடித்து இறைச்சியாக்கும் கும்பல்களுடன் தொடர்பு என சமூக வலைத்தளங்களில் செய்திகளை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
கைதான இருவர் மற்றும் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் முன்னர் குற்றச்சாட்டுக்கள் ஏதேனும் இருந்தாக காவல்துறை நீதிமன்றில் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை என அறியப்படுகிறது.
இன்று தனது மகனை இழந்து தவிக்கும் அந்த தாயின் கதரல்களுக்கேனும் நீதி கிடைக்கவேண்டும் அல்லவா..
ஆக உண்மையில் இந்த சமபவத்தில் பல விடயங்கள் மூடி மறைக்கப்படுகிறதா..
இதுவே எமது கேள்வி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |