மருந்து பற்றாக்குறை - ரணில் விடுத்த பணிப்புரை(படம்)
இலங்கையில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பான உடனடி ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (25) சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மருந்துப் பற்றாக்குறைக்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள் குறித்து கலந்துரையாட பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களுக்கான கொடுப்பனவை இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்நோக்கும் டொலர் பற்றாக்குறை தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் விளைவாக இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பிரான்ஸ் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் இருப்பு காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களையும் தொடர்ந்து 90 நாட்களுக்கு பராமரிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்துள்ளார்.