எங்கிருக்கிறார் கோட்டாபய..! விமானப்படையும் மறுத்தது
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விமானப்படை தளபதியின் வீட்டில் இருப்பதாக வெளியான தகவலை இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி உக்கிரமடைந்த போராட்டத்தை தொடர்ந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவுக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
அரச தலைவர் விமானப்படை தளபதியின் வீட்டில் இருப்பதாக முன்னாள் காவல்துறை அதிகாரி, அஜித் தர்மபால வெளியிட்ட காணொளியே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றன.
எனினும் இந்த செய்திகளில் உண்மையில்லை என விமானப்படை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
விமானப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை
இது விமானப்படை மற்றும் விமானப்படை தளபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை.
அத்துடன், விமானப்படை தொடர்பில் பொது மக்களுக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்டும் சந்தர்ப்பவாத நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக வெளியிடப்படும் திரிப்படுத்தப்பட்ட செய்தி எனவும் விமானப்படை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறிருக்க, அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது, குடிவரவு பணியாளர்கள் அவரை தடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்தி, சொந்த நாட்டிலேயே சிக்கியுள்ள ராஜபக்சர்கள் - விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட கோட்டாபய!