பிள்ளையானைக் காட்டிக் கொடுத்தது இவரா? அதிர்ச்சியில் பிள்ளையான் குழு உறுப்பினர்கள்
பிள்ளையான் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிள்ளையானின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டைகள் நடைபெறுகின்றன.
பிள்ளையானின் 27 அலுவலக முன்னாள் பொறுப்பாளர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள் அல்லது கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.
முன்னரைப் போல சட்டவிரோதமாக இத்தனை காரியங்களும் நடைபெறவில்லை. சட்டப்படி தான் பிள்ளையான் மீதும், TMVPயினர் மீதும், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்கள்.
பிள்ளையான் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற நீதிக்குப் புறம்பான காரியங்கள் அத்தனையுமே - பிள்ளையான் விவகாரத்தை விசாரணைகள் செய்து வருகின்ற புலனாய்வுப் பிரிவினருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கின்றது.
பிள்ளையான் குழுவினரால் கொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள், எந்தெந்த இடங்களில் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கின்றன, ‘ரிப்போலி பிளட்டுன்’ என்ற பெயரில் பிள்ளையான் குழு மேற்கொண்ட கடத்தல்கள் என்ன - அத்தனை தகல்களும் துல்லியமாக அரச புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
யார் இந்தத் தகவல்களை வழங்கி வருகின்றார்கள் என்பது TMVP உறுப்பினர்களுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியாகவே அண்மைக்காலமாக இருந்து வந்தது.
பிள்ளையான் மற்றும் பிள்ளையான் குழுவின் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி அரச புலனாய்வாளர்களுக்குத் தகவல்களை வழங்கிக்கொண்டிருப்பது - பிள்ளையானுடைய நெருங்கிய சகா என்று தற்பொழுது அறியக் கிடைக்கின்றது.
மட்டக்களப்பு ஓட்டைமாவடியைச் சேர்ந்த அந்த நபர், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் கீழ் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் ஐந்து வருடங்களாக இருந்ததுடன், பிள்ளையானுடன் இணைந்து பல குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடன் இணைந்து செயற்பட்ட மற்றொரு முன்நாள் ‘ரிபோலிப் பிளட்டூன்’ உறுப்பினர் அரச படைகளின் சாட்சியாளராக மாறியதைத் தொடர்ந்து, இவரும் தற்பொழுது அரசதரப்பின் சாட்சியாக மாறி, பிள்ளையான் மேற்கொண்ட பல குற்றச்செயல்கள் பற்றிய தகவல்களை அரச புலனாய்வாளர்களுக்குக் கூறிவருவதாகத் தெரியவருகின்றது.
குறிப்பாக, பிள்ளையான் தரப்பினர் மேற்கொண்ட படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்கள், பிணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள், இராணுவ அதிகாரிகளுக்கு இருக்கின்ற தொடர்புகள் - இப்படி பல இரகசியங்களை புலனாய்வுப் பிரிவினரிடம் குறிப்பிட்ட இந்த நபர் வெளியிட்டுவருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிள்ளையான் குழுவினரால் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், கொள்ளையடிக்கப்பட்வர்களுக்கான நீதி - காலம் கடந்துவிட்டபோதும் கிடைக்க ஆரம்பித்திருப்பது பற்றி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுவருகின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
