நான்கு அமைச்சர்கள் மட்டும் நியமிக்கப்பட்டது ஏன்? அரச தலைவர் அலுவலகம் விளக்கம்
முழு அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்டபூர்வமாகவும் நிலையானதுமாக முன்னெடுக்கவே நான்கு அமைச்சர்களை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று நியமித்தார் என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில், நாடாளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் நிதியமைச்சகங்களின் செயற்பாடுகளுக்காக சபைத் தலைவர் மற்றும் அரசாங்க கொறடா ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் தான் இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தமது பங்களிப்பை வழங்குமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அரச தலைவர் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, அனைத்து கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் அரச தலைவர் கோருகிறார் என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று அரச தலைவர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்கள்,
01. கல்வி – திரு.தினேஷ் குணவர்தன (சபைத் தலைவர்)
02. வெளிநாட்டு அலுவல்கள் – ஜி.எல்.பீரிஸ்
03. நெடுஞ்சாலைகள் – தஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (அரசாங்க கொறடா)
04. நிதி - அலி சப்ரி