சமஷ்டி தொடர்பான சிங்களவர்களின் மனநிலை! அறியாமல் முன்னேற முடியாது என்கிறார் கம்மன்பில
சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது கருத்து வெளியிட்ட கம்மன்பில, “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.
சிங்களவர்களின் மனநிலை
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும். அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.

பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் எமது நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது. அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும் பிரதிபலித்தன.
ஏன் மூன்று தசாப்தகால யுத்தம் ஆரம்பமானது, ஏன் தமிழர்கள் தற்கொலைக்குண்டுதாரிகளானார்கள் என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லை. இவ்விடயத்தில் சிங்களவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் முன்னோக்கி நகர இயலாது.
ஏற்கனவே புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், மீண்டும் ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக்கொள்ளாத புதியதொரு ஆவணத்தை உருவாக்குவதில் எவ்வித பயனுமில்லை என்பதே எனது நிலைப்பாடாகும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |