தமிழர் தலைநகரில் சங்குடன் இணையுமா தமிழரசு : இன்று எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு
திருகேணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (15) திருகோணமலை ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
சட்டத்தரணி தேவராஜா தேவசேகரம் முன்னிலையில் அந்தக்கட்சியின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை
இதன்போது கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன், ” திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் ஆட்சி அமைக்கக்கூடிய பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேராமல் ஆட்சி அமைக்க முடியாத நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் ஆரம்பத்தில் எமது கோரிக்கையை தமிழரசுக் கட்சியிடம் வைத்த போதிலும் அவர்களிடம் இருந்து தகுந்த பதில் எதுவும் பெறப்படவில்லை.
அதன் பின்னராக தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்மை பலதடவைகள் தொடர்புகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
எனினும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காது எந்தவொரு தனிப்பட்ட முடிவும் எம்மால் எடுக்க முடியாதிருக்கின்றது.
இன்றைய தினம் அது குறித்த தீர்க்கமான முடிவெடுக்கப்படும். அது தொடர்பில் தமிழரசுக் கட்சியிடமும் அறிவிக்கப்படும்.
மேலும், நாளையதினம் வவுனியா மாநகரசபை ஆட்சியமைக்க இருக்கின்ற நிலையிலே நிச்சயமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும்.
ஆட்சியை தக்கவைப்பதற்கான அனைத்து சபைகளிலும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
